வெள்ளி, 27 ஏப்ரல், 2012

எங்கடா போகுது தமிழன் கலாச்சாரம்












வறுமை காரணமாக , வில்வித்தை வீராங்கனை நிஷா ராணி தத்தா, உலகத்தரம் வாய்ந்த தனது "வில்லை' விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது துரதிருஷ்டவசமானது என, விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்தார்.
ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தின், பத்மடா கிராமத்தை சேர்ந்தவர் நிஷா ராணி தத்தா, 21. டாடா வில்வித்தை அகாடமியில் பயிற்சி பெற்ற இவர், பாங்காங்க் கிராண்ட் பிரிக்சில் நடந்த சர்வதேச வில்வித்தை போட்டியில், இந்தியா சார்பில் தங்கம் வென்றுள்ளார். வறுமை காரணமாக போதிய பண வசதி இல்லாததால், வில்வித்தையில் இருந்து ஒதுங்கி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.
இதனிடையே, நிஷா ராணியின் வீட்டினை பழுது பார்க்க பணம் தேவைப்பட்டது. இதற்காக, வில்வித்தை போட்டிக்கு பயன்படுத்தப்படும், உலகத்தரம் வாய்ந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள, தனது வில் மற்றும் அம்புகளை இவர் விற்ற செய்தி இப்போது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் கூறியது:
வறுமையால் இப்படி நடந்ததுள்ளது என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்.ஏ.ஐ.,) மூலமாகத்தான் இந்த செய்தி தெரியவந்தது. அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத்தயராக உள்ளோம். மாநில அரசுகள் இவ்விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
வீரர், வீராங்கனைக்குத் தேவையான நிதி ஆதாரங்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் தரவேண்டும். ஏதோ ஒரு காரணத்துக்காக தேசிய அல்லது சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை என்றாலும், வாழ்க்கை நடத்த உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இவர்களை புறக்கணிக்கக் கூடாது.
இவ்வாறு அஜய் மேகன் கூறினார்.

திங்கள், 23 ஏப்ரல், 2012

மனித கழிவு கேஸ் : நாற்றம் இல்லை, எரிதிறன் அதிகம் : அசத்துகிறார் ஓய்வு பெற்ற பொறியாளர்


மனித கழிவில் இருந்து கேஸ் உற்பத்தி செய்து அதை பயன்படுத்தி சமையல் செய்து அசத்துகிறது ஓய்வு பெற்ற பொறியாளர் குடும்பம். நாற்றம் இல்லை, எரிதிறன் அதிகம் என்பது இதன் சிறப்பு.
கோவை கே.வடமதுரை திரு.வி.க நகரை சேர்ந்தவர் செல்வன் (62). ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர். இவர் எரிசக்தி நிறுவனம், ஆராய்ச்சி பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். இவர் மனைவி கிரிஜேஸ்வரி. செல்வன் பணி ஓய்வு பெற்றபின் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தை அணுகி, மனித கழிவிலிருந்து பயோ கேஸ் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த உதவி கேட்டார். கேலி கிண்டலுக்கு பிறகு அதிகாரிகள் ஒப்புதல் வழங்கினர்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மனோகரசிங் தலைமையில் அதிகாரிகள் குழு, முட்டை வடிவில் கழிவு சேகரிப்பு தொட்டி கட்டி அதில் டியூப் அமைத்து நேரிடையாக கேஸ் அடுப்புடன் இணைத்தனர். கடந்த ஜனவரி மாதம், மனித கழிவு கேஸ் அடுப்பு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு 40 ஆயிரம் ரூபாய் செலவானது. நாற்றம் எதுவும் இல்லாமல் கேஸ் அடுப்பு எரிகிறது. இதையடுத்து, மாநில அளவில், வீட்டு கழிவறையில் இருந்து கேஸ் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஓய்வு பெற்ற மேற்பார்வை பொறியாளர் செல்வன் கூறியதாவது;

வழக்கமாக அமைக்கப்படும் 10 அடி நீளம், 5 அடி அகலம், 5 அடி ஆழத்தில் செப்டிங் டேங்க் கட்டி அதில் "கேஸ்தேங்கும் வகையில் கூம்பு போன்ற பகுதியை உருவாக்க வேண்டும். மனித கழிவில் இருந்து உருவாகும் கேஸ், கூம்பு பகுதியை சென்றடையும். அங்கே டியூப் அமைத்து அதை நேரிடையாக கேஸ் அடுப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தேவையானபோது வால்வை திறந்து கேஸ் பயன்படுத்தலாம். செப்டிக் டேங்க்கில் மனித கழிவுடன் பழைய சோறு, குழம்பு, அழுகிய காய், பழம் உள்ளிட்ட மக்கும் பொருட்களை போடலாம். இதில் இருந்தும் உருவாகும் கேஸ் திடக்கழிவு செப்டிக் டேங்கின் ஒரு பகுதியில் வெளியேறி விடும். அதில் எவ்வித நாற்றமும் இருக்காது. ஏனெனில் கேஸ் வெளியேறிய பின்னர் நாற்றம் வராது. இதை பூந்தோட்டத்திற்கு உரமாக பயன்படுத்தி வருகிறோம். கழிவு தண்ணீரை செடிகளுக்கு பாய்ச்சுகிறோம். செப்டிக் டேங்க் அமைக்க 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகி விடும். இதையே கேஸ் தயாரிப்பு தொட்டியாக மாற்றினால் இரட்டிப்பு பயன் கிடைக்கும். 2 பேர் பயன்படுத்தும் கழிவறை மூலமாக 90 நிமிட நேரம் எரியும் அளவுக்கு கேஸ் கிடைக்கும்.

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் பயோ கேஸ் பிரிவு தொழில்நுட்ப அலுவலர் ராஜா கூறியதாவது: மனித கழிவில் இருந்து தயாரிக்கப்படும் வாயுவை பயன்படுத்தி சமைக்கப்படும் உணவை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், மக்கள் அருவருப்பாக கருதி இதை செய்ய முன்வருவதில்லை. கிராமங்களில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் செல்வன் வீட்டில் மனித கழிவிலிருந்து பயோ கேஸ் தயாரிக்கப்படுகிறது. இதற்கு அரசு மானியமாக 8 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. மனித கழிவுகளில் "மீத்தேன்" வாயு அதிகம் என்பதால் வேகமாக எரியக்கூடியது. பெட்ரோலியம் கேசை காட்டிலும் இதன் எரிதிறன் 25 சதவீதம் அதிகம். விபத்து ஏற்படுத்தாது. இவ்வாறு ராஜா கூறினார்.

சமுதாய சமையல் கூடம்

ஆனைமலை அருகே தென் சங்கம்பாளையம் கிராமத்தில் 80 சதவீத மக்களுக்கு கேஸ் சிலிண்டர் வசதி கிடையாது. இங்கே 7 லட்ச ரூபாய் செலவில் சமுதாய சமையல் கூடம் அமைக்க, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டமிட்டுள்ளது. பொது கழிப்பிடத்தில் இருந்து "மீத்தேன்" வாயுவை எடுத்து அதில் இருந்து 12 கேஸ் அடுப்புகளை இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரத்தில் இதற்கான பணிகள் துவக்கப்படும். இந்த சமையல் கூடத்தில் பொதுமக்கள் அரிசி, மளிகை பொருட்களை கொண்டு வந்து இலவசமாக சமையல் செய்து கொள்ளலாம். மாநிலத்தில் முதல் முறையாக இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.


எது உலக அதிசயம்





உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம்
சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால்
மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக
அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)

நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும்
தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000
வருடங்களாக மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் இன்று வரை எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை!

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !

இந்த தகவலை நண்பர்களுடன் பகிருந்துகொளுங்கள்!

வாழ்க தமிழ்
வளர்க பாரதம்